சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றே வந்திடு சாத கப்புள் வகுத்தனன்;அமுதண் டாக்கிப் பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை; இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம் இலகிய அழகை ஈசன் இயற்றினான்,சீர்த்தி இந்த உலகினில் எங்கும் வீசி,ஓங்கிய இரவி வர்மன் அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே. மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான் நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான்,இந்நாள் பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான். அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி திறம்பட வகுத்த எம்மான்!செய்தொழில் ஒப்பு நோக்க விரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்? அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்ட கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும், சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின் ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? |