யோக சித்தி் வரங் கேட்டல்


விண்ணும் கண்ணும் தனியாளும்-எங்கள்
வீரை சகித நினதருளே என்தன்
கண்ணுங் கருதும் எனக்கொண்டு-அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி-நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ?-உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?

நீயே சரணமென்று கூவி-என்தன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி
தாயே!யெனக்குமிக நிதியும்-அறந்
தன்னைக் காகுமொரு திறனும்-தரு
வாயே யென்று பணிந் தேத்திப்-பல
வாறா நின்றுபுகழ் பாடி-வாய்
ஓயே னாவதுண ராயோ?-நின
துண்மை தவறுவதொர் உலகோ?

காளீ வலியசா முண்டி-ஓங்
காரத் தலைவியென் னிராணி-பல
நாளிங் கெனையலைக்க லாமோ?-உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ?-மனல்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன்-அது
தாரா யெனிலுயிரைக் தீராய்-துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன்-கரு
நீலியென் னியல்பறி யாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்-என்தன்
முன்னைத் தீயவினைக் பயன்கள்-இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதியவுயி ராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகப்தெளிவு செய்த-எனுறும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

தோளை வலியுடைய தாக்கி-உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு
மாறா வுடலுறுதி தந்து-சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி
நண்ணித் திகழும்முகந் தந்து-மத
வேளை வெல்லும்முறை கூறித்-தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.

எண்ணுங் காரியங்க ளெல்லாம்-வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும்-தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும்-சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம்-மிக
நன்றா வுயத்தழுந்தல் வேண்டும்-பல
பண்ணிற் கோடிவகை இன்பம்-நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.

கல்லை வயிரமணி யாக்கல்-செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல்-மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல்-என
விந்தை தோன்றிட இந்நாட்டை-நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.

கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை
நாடும் படிக்குவினை செய்து-இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்-கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய்-அடி
தாயே!உனக்கரிய துண்டோ?-மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும்-புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்-பல
பையச் சொல்லுவதிங் கென்னே! முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-எனை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன்-இனி
வையத் தலைமையெனக் கருள்வாய்-அன்னை
வாழி!நின்னதருள் வாழி!

ஓம் காளி!வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என்இராணி!