காற்று



ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல்.ஓலைப் பந்தல்,தென்னோலை.
குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.

 மூங்கிற் கழியிலே கொஞ்சம் ச்சக் கயிறு தொங்குகிறது.
ஒரு சாண் கயிறு இந்தக் கயிறு. ஒரு நாள் சுகமாக
ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும். கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை ‘குஷால்’ வழியிலிருந்தது.
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.
“கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?
பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை?
ஆனால் அது சந்தோஷமாக இரக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லா விட்டால், முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமே யில்லை. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.

ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும் அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப்
பேசிக்கொண்டும் ரசப் போக்கிலேயிருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன. அண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)

கந்தன் வள்ளியம்மை மீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

“என்ன, கந்தா, சௌக்கியம் தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ! போய், மற்றொரு முறை வரலாமா?” என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன்:- “ அட போடா வைதிக மனுஷன்! உன் முன்னே கூடி லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயா பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.

“சரி. சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம்” என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன், கடகட வென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மைக் கட்டிக்கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந்தானே?

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டுமவிட்டத.

சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.

மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல், இப்படியாக நடந்துகொண்டே வந்தது. “என்ன,கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்ல
மாட்டேனென்கிறாய்? வேறொருசமயம் வருகிறேன். போகட்டுமா?’ என்றேன்.

“அட போடா! வைதிகம்! வேடிக்கைதான பார்த்துக்கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிட சில விவரகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும்
நானும் சில விஷயங்சகள் பேசலாம். என்றிருக்கிறேன். போய்விடாதே, இரு” என்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்தவுடன்,பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.
உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.

இரண்டே‘சங்கதி’ பின்பு மற்றொரு பாட்டு. கந்தன் பாடி முடிந்தவுடன், வள்ளி, இது முடிந்தவுடன், அது மாற்றி மாற்றிப் பாடி-கோலாஹலம்.

சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக் கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.

அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன்.

நான் போவதை அவ்விரண்டு கயிறுகளு கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டிருந்தது, கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய் வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே” என்றது.

“அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?” என்று கேட்டேன்.

ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்த வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!‘

காற்றுத்தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசிபோல் ஒளி வடிவமாக இருந்தது. ‘நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்மாஸி” காற்றே, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.

அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல்வீசிக் கொண்டிருந்தது.

ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

காற்றுத் தேவன் சொல்வதாயினன்:- “மனகே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்ற கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய்விட்டது, நான் ப்ராண சக்தி.

என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு களைபெய்தியவுடனனே அதனை உறங்க-இறக்க-விட்டு விட்டேன்.
துயிலும் சாவுதான். சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன்.
அது மறுபடி பிழைத்துவிடும்.

நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன்.நான் சக்தி குமாரன், என்னை வணங்கி வாழ்க. என்றான்.

“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வமேவ ப்ரத்யக்ஷம் ஹ்ம வதிஷ்யாமி.”
2
நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவதுபோன்ற புயற்காற்று.அலைகள் சாரி வீசுகின்றன. நிர்த்தூளிப் படுகின்றன. அவை மோதி வெடிக்கின்றன. சூறை யாடுகின்றன. கப்பல்
நிர்த்தனஞ் செய்கின்றது; மின் வேகத்தில் எற்றப்படுகின்றது; பாறையில் மோதிவிட்டது. ஹதம்! இருநூறு உயிகள் அழிந்தன. அழியுமுன், அவை யுக முடிவின் அனுபவம்
எங்ஙனமிருக்குமென்பதை அறிந்துகொண்டு போயின.

ஊழி முடிவும் இப்படியே தானனிருக்கும். உலகம் ஓடுநீராகிவிடும்; தீ, நீர், சக்தி காற்றாகி விடுவாள்.

சிவன் வெறியிலே யிருப்பான். இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும். அஃது சக்தி யென்பது தோன்றும். அவன் பின்னே சிவன் நிற்பது தோன்றும்.

காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி நீரைத் தூளாக்கித்
தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான்.

காற்றே யுமுடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக.“நமஸ்தே வாயோ,த்வமேவ ப்ரத்ணக்ஷம் ப்ரஹ்மாஸி.
3
காற்றுக்குள் காது நிலை.சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்.காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது.காற்றுக்குக் காதில்லை.அவன் செவிடன்.

காதுடையவன் இப்படி இரைச்ச டுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதலிட்டு இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி
விளையாடுவானா? காற்றை,ஒலியை வலிமையை வணங்குகின்றோம்.
4
பாலைவனம், மணல், மணல், மணல், பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.

மாலை நேரம். அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தோர் போகிறார்கள்.

வாயு சண்டனாகி வந்துவிட்டான். பாலைவனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யம வாதனை, வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது. வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றோம்.
5
வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர்தான் காற்று.உயிர் பொருள்.காற்று அதன் செய்கை.பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர்.

அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர். எனவே உயிர்கள அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறத. மரண மில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல்-எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.
6
காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு,மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண -ரசத்தை
எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை
மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம்.
7
சிற்றெறும்பைப் பார். எத்தனை சிறியது! அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹா சக்தி. அந்த உறுப்புக்களெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது-மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது.
ஒடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறத, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைத் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள். காற்றைப் பாடுகிறோம் அஃது அறிவிலே துணிவாக நிற்பது; உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது. உயிரிலே. உயிர் தானாக நிப்து. வெளி யுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம். நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.
8
மழைக் காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.
 
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம்மீது வீசுக. அதுநம்மை நோயின்றிக் காத்திடுக. மலைக்காற்று
நல்லது. வான் காற்று நன்று. ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம் அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள்
போடலாகாது புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்று வருகின்றான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும்
வழியிலே சோலைகளும், பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக. அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.
காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே பார்த்தாயா? இதோ,தள்ளிவிட்டாய், புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே
நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம்-இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகிவிடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று. அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.
10
மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்.ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர்‘விதிவசம்’என்கிறார்கள். ஆமாம், விதிவசந்தான், 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய விதி.
சாஸ்த்திர மில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு
பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம்;நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால், காற்று நன்று. அதனை
வழிபடுகின்றோம்.
11
காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்.என்றுகிற சக்தி,புடைக்கிற சக்தி,மோதுகிற சக்தி,சுழற்றுவது,ஊதுவது,சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம். சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம்.காற்று சக்தி குமாரன்.அவனை வழிபடுகின்றோம்.
12
காக்கை பறந்து செல்லுகிறது. காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது.அலைகள் போலிருந்து, மேலே
காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று,அஃதன்று காற்று. அது காற்றின் இடம், வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது)
நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு.அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர் பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறிவிடுகிறது. நீரிலே சூடேற்றினால் ‘வாயு’ வாகி விடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது. அத்திரவத்திலே சூடேற்றினால், ‘வாயு’ வாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் ‘வாயு’நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம். இந்த‘வாயு’பௌதிகத் தூள். இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று. அந்த வழியை இயக்குபவன் காற்று. அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று. அவனை வணங்குகின்றோம், உயிரைச் சரணடைகின்றோம்.
13
அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா?ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்.கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இரந்த காற்றுஊதத் தொடங்கி விட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.
வண்டியை மாடு இழுத்துச்செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது.
காற்றாடி? உயிருள்ளது. நீராவி-வண்டி உயிருள்ளது; பெரிய உயிர். யந்திரங்ளெல்லாம் உயிருடையன.
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள்,பூமித்தாய். எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதே யாம்.
அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக் கப்பாலும்,அதற்கப்பாலும், அதற்கப்பாலும், சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டேதானிருக்கின்றன. எனவே,இவ்வையகம் உயிருடையது. வையகத்தின்‘உயிரை’யே காற்றென்கிறோம் அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.
14
காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் “ப்ரத்யஷம் ப்ரஹ்ம” என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன்,
நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம். அவன்
நம்மைக் காத்திடுக. வ்யாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. உதாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. சமாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. காற்றின் செயல்களையெல்லாம்
பரவுகின்றோம். உயிரை, வணங்குகின்றோம். உயிர்
வாழ்க.
15
உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண் கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி. கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த் தொகைகள்-இவை யெல்லாம் நினது விளக்கம்.
மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம். காற்றிலே ஒரு சதுர-அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.
ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை-இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.
மஹத்-அதனிலும் பெரியமஹத்-அதனிலும் பெரிது-அதனிலும் பெரிது.
அணு-அதனிலும் சிறிய அணு-அதனிலும் சிறிது-அதனிலும் சிறிது-
இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம். புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். “நமஸ்தே வாயோ,த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”