சக்தி



சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் சக்தி அநந்தம்.எல்லையற்றது.முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது.

சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, உதறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது,ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது,
ஒன்றாக்குவது, பலவாக்குவது,
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது, குதூஹலந் தருவது. நோவு தீர்ப்பது, இயல்பு தருவது. இயல்பு மாற்றுவது, சோர்வு தருவது, ஊக்கந் தருவது.
எழுச்சி தருவது, கிளர்ச்சி தருவது, மலர்விப்பது, புளகஞ் செய்வது, கொல்வது, உயிர் தருவது.
சக்தி மகிழ்ச்சி தருவது, சினந் தருவது, வெறுப்புத் தருவது, உவப்புத் தருவது. பகைமை தருவது. காதல் மூட்டுவது. உறுதி தருவது. அச்சந் தருவது, கொதிப்புத் தருவதுன. ஆற்றுவது.
சக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது, சக்தி நினைப்பது, ஆராய்வது, கணிப்பது, தீர்மானஞ்செய்வது. கனாக்காண்பது, கற்பனை புரிவது, தேடுவது சுழல்வது,
பற்றிநிற்பது, எண்ணமிடுவது, பகுத்தறிவது.
சக்திமயக்கந் தருவது, தெளிவு தருவது, சக்தி உணர்வது. பிரமன் மகள், கண்ணன் தங்கை, சிவன் மனைவி, கண்ணன் மனைவி, சிவன் மகள், பிரமன் தங்கை.பிரமனுக்கும் கண்ணனுக்கும்
சிவனுக்கும் தாய்.
சக்தி முதற் பொருள். பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு.
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை; சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு; ஒரு ஸ்வர ஸ்தானம்.
சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்.சக்தியின் கலைகளிலே ஒளி யொன்று.சக்தி வாழ்க.
2
காக்கை கத்துகிறது.ஞாயிறு வையக மாகிய கழனியில் வயிர வொளியாகிய நீர் பாய்ச்சுகிறது.அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன. அஃது மேகங்களை ஊடுருவிச்
செல்லுகின்றது.மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புலனை வடிகட்டும் போது,மண்டி கீழும்,தெளிவு மேலுமாக நிற்கின்றன.
 
கோழி கூவுகின்றது.எறும்பு ஊர்ந்து செல்கின்றது.ஈ பறக்கின்றது.
இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான்.இவையனைத்தும் மஹா சக்தியின் தொழில்.அவள்நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக.நமக்குச் செய்கை இயல்பாகுக.
ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை,சலிப்பில்லாத செய்கை,விளையும் செய்கை,பரவும் செய்கை,கூடிவரும் செய்கை,இறுதியற்ற செய்கை,
நமக்கு மஹாசக்தி அருள் செய்க.
கவிதை,காவல், ஊட்டுதல்,வளர்த்தல், மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல்-இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள் புரிக.
அன்புநீர் பாய்ச்சி,அறவென்னும் ஏருழுது,சாத்திரங்களை போக்கி, வேதப்பயிர் செய்து, இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகின்றோம். அதற்கு அவள் தருக.
3
இருள் வந்தது,ஆந்தைகள் மகிழ்ந்தன.

காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள்.

ஒளி வந்ததது;காதலன் வந்தான்.பெண் மகிழ்ந்தாள்.
 
நாம் அச்சங் கொண்டோம்; தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம். தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள். குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி
சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள். மஹா சக்தி வாழ்க
4
 
“மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” என்றான் ராம கிருஷ்ண முனி.
 
ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா?
என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும். தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய
கோயில்கள் வேண்டும்.இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள். இது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டுவிடுவாள். இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்.
இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன. இப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன. இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது. இது எனக்குப் போதும்.
“சென்றது கருத”மாட்டேன். “நாளைச் சேர்வது நிக்க’‘மாட்டேன். இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள். அவள் நீடுழி வாழ்க. அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன். வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன்.
5
“மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது? மண்ணைக் கட்டினால அதிலுள்ள வானத்தைக் காட்டிய
தாகாதா?
உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டு. சக்தியை கட்டலாம். அநந்த சக்திக்கு கட்டுப்படுவதி வருத்த மில்லை.
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம். ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்.
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாதபடி காக்கலாம்.
அதனை அடிக்கடி புதுப்பித்தக்கொண்டிருந்தால், அந்த “வடிவத்திலே”சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கா விட்டால் அவ்“வடிவம்”மாறும்.
அழுக்குத் தலையணை; ஒட்டைத் தலையணை, பழைய தலையணை- அதிலுள்ள பஞ்சை யெடுத்துப் புதிய மெத்தையிலே போடு. மேலுறையைக் கந்தையென்று வெளியே
எறி. அந்த“வடிவம்” அழிந்துவிட்டது.
வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்; அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்; வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை. எங்கும்,எதனிலும், எப்போதும்,எல்லாவிதத்
தொழில்களும் காட்டுவது சக்தி, வடிவத்தைக்காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.
சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு, ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவார் சக்தியை இழந்து விடுவார்.
6
பாம்பு பிடாரன் குழலூதுகின்றான்.
“இனிய இசை சோகமுடையது” என்பது கேட்டுள்ளோம். ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயனும் சோக ரசந் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது
போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறியசிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
“தான தந்தத் தான தந்தத் தா-தனத்
தான தந்தன தான தந்தன தா-
தந்தனத்தன தந்தனத்தன தா”
அவ்விதமானப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான். இதற்குப் பொருளென்ன?
ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று:-
“காளிக்குப் பூச்சூட்டினேன், அதைக் கழுதையென்று தின்ன வந்ததே.”
பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன். அதைப் பாவத்தால் விளைந்த நோய் தினன் வந்தது.
பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்துவிட்டது. ராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள்.
அவள் வாழ்க.
7
பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.

உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழலிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும். இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின் தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசை யுண்டாக்குதல்-சக்தி.
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி சேர்த்து விட்டது? சக்தி.
“ஜாரிகை வேணும்;ஜரிகை?” என்றொருவன் கத்திக்கொண்டு போகிறான். அதே சுருதியில். ஆ!பொருள் கண்டு கொண்டேன். பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்
ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன். தோற்றம் பல. சக்தி ஒன்று அஃது வாழ்க.
8
பராசக்தியைப் பாடுகின்றோம். இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை: இவள்தானேபிறந்த தாய் ‘தான்’ என்ற பரம் பொருளினிடத்தே. இவள் எதிலிருந்து தோன்றினாள்? ‘தான்’என்ற பரம் பொருளிலிருந்து. எப்படித் தோன்றினாள்? தெரியாது.
படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும் தெரியாது.
சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியாது.
வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும். வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல்.
உள்ளம் தெளிந்திருக்க; உயிர் வேகமும் சூடும் உடையதாக; உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க, மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம். நம்மை வாழ்வுறச்
செய்த மஹா சக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்.