ராகம்-புன்னாகவராளி | தாளம்-திஸ்ர ஏகம் | |
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை; வேலவா!-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது, வேலவா! சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு வள்ளியைக்-கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன்-சிங்கன் கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட வேலவா! பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை-ஒரு பார்ப்பனக் கோலந் தரித்துக் கரந்தொட்ட வேலவா! | 1 | |
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங் கடலினை-உடல் வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய். கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச் செல்வத்தை-என்றும் கேடற்ற வாழ்வினை-இன்ப விளக்கை மருவினாய். கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன்-பானு கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய். துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன மானைப்போல்-தினைத் தோட்டத்திலேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா! | 2 | |
ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப மாகுதே;-கையில் அஞ்ச லெனுங்குறி கண்டு மகிழ்ச்சியுண் டாகுதே, நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும்-இங்கு நீக்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா! கூறு படப்பல கோடி யவுணரின் கூட்டத்தைக்-கண்டு கொக்கரித் தண்டங் குலுங்க நகைத்திடுஞ் சேவலாய்! மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள்-எங்கள் வைரனிவ பெற்ற பெருங்கன லே.வடி வேலவா! |
வேலன் பாட்டு
வேலன் பாட்டு