வேலன் பாட்டு

                         வேலன்  பாட்டு 
ராகம்-புன்னாகவராளி தாளம்-திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
      வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
      யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
      வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
      தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
      பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
     கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
      வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
     கரந்தொட்ட வேலவா!
1

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
      கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
      புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
      செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
      விளக்கை மருவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
      குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
      துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
      மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
      மணங்கொண்ட வேலவா!
2

ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
      மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
      மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
      யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
      காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
      கூட்டத்தைக்-கண்டு

கொக்கரித் தண்டங் குலுங்க
      நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
      தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
      லே.வடி வேலவா!