அதிவேக ரயில் அறிமுகம் : மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் ஓடும்

அதிவேக ரயில் அறிமுகம் : மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் ஓடும்

பீஜிங்
: சீனாவில் மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை விட, மிக வேகமாக செல்லும் திறன்
இந்த ரயிலுக்கு உண்டு.


சீனாவில்,
ஹார்மனி எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ள உலகின் அதிவேக ரயில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்ட
இந்த அதிவேக ரயிலுக்கு சீன மொழியில், "ஹெக்சியோ ஹாவோ' என பெயர்.
ஹெலிகாப்டரை விட, மிகவும் வேகமாக செல்லக் கூடிய இந்த ரயிலின்
தொழில்நுட்பத்தை சீமென்ஸ் மற்றும் கவாசகி நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன.இதன்
சோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. வுகான் - குவாங்ஜோயு இடையேயான
1,062 கி.மீ., தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, மணிக்கு 354
கி.மீ., தூரத்தை அநாயசமாக கடந்து சென்றது இந்த ரயில். ஜன்னலுக்கு வெளியில்
தெரியும் இயற்கைக் காட்சிகள் எல்லாம், கண் இமைக்கும் நேரத்தில் மங்கலாக
தோன்றி மறைந்தன.இந்த ரயில் செல்வதற்காகவே பிரத்யேகமான ரயில் பாதை
அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை விரிவு படுத்துவதற்காக 35.52
லட்சம் கோடி ரூபாய் செலவில் மேலும், 8,000 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை
அமைக்கப்படுகிறது.


இந்த ரயில்
பாதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,571 கி.மீ., தூரத்துக்கு விரிவு
படுத்தப்படவுள்ளது. ஜப்பானின் புல்லட் ரயில், பிரான்சின், டி.ஜி.வி.,
போன்ற அதிவேக ரயில்களை விட, இந்த ரயில் வேகமாக செல்லக் கூடியது. இதில்
முதல் வகுப்பில் பயணிப்பதற் கான கட்டணம், 5,328 ரூபாயாக நிர்ணயிக்கப்
பட்டுள்ளது. இது, சீனாவில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியின், ஒரு
வார சம்பளத் தொகைக்கு சமம். ஹார்மனி எக்ஸ்பிரசுக்கு கிடைத்துள்ள வரவேற்பை
அடுத்து, போட்டியை சமாளிக்கும் வகையில், சீன விமான நிறுவனம், உள்நாட்டு
விமான போக்குவரத்துக்கான கட்டணங்களை குறைத்துள்ளது.


இந்த ரயிலில் பயணம் செய்த லுயோ என்ற சீன தொழில் அதிபர் கூறுகையில்,
"மணிக்கு 480 கி.மீ., வேகம் செல்லக் கூடிய அதிவேக ரயிலை விரைவில்
இயக்குவோம், என ரயில்வே அமைச்சர் சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். இது
நடக்காத காரியம் என, நினைத்தேன். தற்போது இந்த ரயிலில் பயணம் செய்ததும்,
என் கருத்தை மாற்றிக் கொண்டேன்'என்றார்.கார் மற்றும் விமானங்களை இயக்குவதை
விட, அதிவேக ரயில்களை இயக்குவதால் மாசு கட்டுப்பாட்டை பெரிய அளவில்
குறைக்க முடியும் என, அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கருதுகின்றன.
இதையடுத்து, அதிவேக ரயில்கள் செல்லும் வகையிலான பிரத்யேக ரயில் பாதைகளை
அமைக்கும் நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் சீனா
தான் முன்னணியில் உள்ளது.