மனித வாழ்வின் நோக்கம்




* அஞ்சாத மனோ தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இவ்வுலகத்தில் இல்லை. வானத்திலும் இல்லை. அதனால் மனிதன் எல்லா இன்பங்களையும் பெறுவான். இது உறுதி.
* ஒவ்வொரு நிமிடமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, கடவுளை அறிய முயல்கின்றவனே மனிதன் என்றும், தேவர் என்றும் சொல்வதற்கு உரியவன். 
* மனிதர்களுக்கு இரண்டு நிலைதான். ஒன்று சுதந்திர நிலை; மற்றொன்று அடிமை நிலை. தன்னிஷ்டம் போல் செயல்புரிந்து அதில் வரும் இன்பதுன்பங்களுக்குத் தானே பொறுப்பாளி ஆவது சுதந்திர நிலை. அப்படி இல்லாமல் பிறருக்கு கட்டுப்பட்டு இன்பதுன்பங்களை அனுபவிப்பது அடிமை நிலை. 

* எத்தனையோ மனித உயிர்கள் வாழ்வின் நோக்கம் இன்னதென்று அறியாமல், கேவலம் உடல் சுகத்துக்காக, உண்டு உடுத்தி வாழ்ந்து இறந்து போவது அறியாமையாகும். நமக்குள் இருக்கும் இறைவனை அறிவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

* மனித மனங்களுக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த பேதங்களால் ஏற்படும் மனஸ்தாபங்கள் எல்லையற்றதாகி விட்டன. இதனால், உலக வாழ்க்கையை மனிதர்கள் நரகம் போல் தீராத்துன்ப உலகமாக மாற்றி விட்டனர்.