செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடு
- செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
- தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
- தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
- சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
- வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
- வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
- காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
- கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
- காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
- கண்டதோர் வையை பொருனை நதி - என
- மேவிய யாறு பலவோடத் - திரு
- மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
- முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
- மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
- எத்தனையுண்டு புவிமீதே - அவை
- யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
- நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
- நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
- மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
- மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
- கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
- கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
- பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
- பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
- வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
- அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
- யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
- சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
- தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
- தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
- சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)
- விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
- வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
- பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
- பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)
- சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
- தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
- ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
- நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)