(பள்ளர் களியாட்டம்)
ராகம் - வராளி தாளம் - ஆதிபல்லவி
- ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
- ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)
- பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
- பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
- ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
- ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)
- எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
- எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
- சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
- தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)
- எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
- ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
- நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
- நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
- உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
- விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும்
- வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு)
- நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
- நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
- பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
- பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)