வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி
- நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
- நாட்டினாய், கனல் மூட்டினாய்,
- வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
- மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி)
- கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
- கோஷித்தாய், - எமை தூஷித்தாய்,
- ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
- ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி)
- கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
- கூறினாய், - சட்டம் மீறினாய்,
- ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
- ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி)
- அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
- ஆக்கினாய், - புன்மை போக்கினாய்,
- மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
- மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி)
- தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
- தூண்டினாய், - புகழ் வேண்டினாய்,
- கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
- காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி)
- எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
- ஏவினாய், - விதை தூவினாய்,
- சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
- செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி)
- சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
- சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன்
- தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
- தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)