மூன்று காதல் முதலாவது-சரஸ்வதி காதல்



ராகம்-சரஸ்வதி மனோஹரி                                           தாளம்-திஸ்ர ஏகம்பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா!

ஆடி வருகையிலே-அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்
ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கித மாகப் பதம் படிப்பாள், அதை
நாடி யருகணைந்தால்-பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்று
கூடி மகிழ்வ” மென்றால்-விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா!

ஆற்றங் கரைதனிலே-தனி
யானதோர் மண்டப மீதினிலே,தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை
ஏற்று மனமகிழ்ந்தே-’ அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல-பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா!

இரண்டாவது-லக்ஷ்மி காதல்

ராகம்-ஸ்ரீராகம்                                                                          தாளம்-திஸ்ர ஏகம்

இந்த நிலையினிலே,அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள்-அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்தன்
சிந்தை திறைகொடுத்தேன்-அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தினமுதலா-நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேன்,அம்மா!

புன்னகை செய்திடுவாள்-அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள்-அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்;பின்னர்
என்ன பிழைகள் கண்டோ-அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள்;அங்கு
சின்னமும் பின்னமுமா-மனஞ்
சிந்தி யுளமிக நைந்திடு வேன்,அம்மா!

காட்டு வழிகளிலே-மலைக்
காட்சியிலே,புனல் வீழ்ச்சி யிலே,பல
நாட்டுப் புறங்களிலே-நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே,சில
வேட்டுவர் சார்பினிலே-சில
வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள்வருவாள்-கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம்,அம்மா!

மூன்றாவது-காளி காதல்

ராகம்-புன்னகவராளி                                                             தாளம்-திஸ்ர ஏகம்

பின்னோர் இராவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே-களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா!-இவள்
ஆதி பராசக்தி தேவி யடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!
செல்வங்கள் பொங்கிவரும்;-நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
விலலை யசைப்பவளை-இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!