கோமதி மஹிமை


தாருக வனத்தினிலே-சிவன்
சரணநன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார்-பர
சிவன்பு கழமுதினை அருந்திடுவார்;

பேருயர் முனிவர் முன்னே-கல்விப்
பெருங்கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞனத்தினால்-உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்.

"வாழிய முனிவர்களே!-புகழ்
வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
உழியைச் சமைத்த பிரான்;-இந்த
உலக மெலாமுருக் கொண்டபிரான்,
ஏழிரு புவன்ததிலும்-என்றும்
இயல்பெரும் உயிகளுக் குயிராவான,
ஆழுநல் லறிவாவான்,-ஒளி
யறிவிக் கடந்தமெய்ப் பொருளாவான்.

தேவர்க் கெலாந்தேவன்;-உயர்
சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும்-அந்தக்
கண்ணனுந் தானுமிங் கோருருவாய்,
ஆவசெல டருந்தவங்கள்-பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள்புரிந்தான்,-அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.

கேளீர்,முனிவர்ளே!-இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால்-சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்,
மூளுநற் புண்ணியந்தான்-வந்து
மொய்த்திடும்;சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள்-பல
நணுகிடும்;சரதமெய் வாழ்வுண்டாம்.

இக்கதை உரைத்திடுவேன்,-உளம்
இன்புறக் கேட்பீர்,முனிவர்களே!
நக்க பிரினருளால்-இங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்க்ள்-வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவர றிவார்?-புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்?

நக்க பிரான றிவான்;-மற்று
நானறி யேன்பிற நரரறியார்;
தொக்க பேரண்டங்கள்-கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்;ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கடலதனுக்கே-எங்கும்
அக்கரை யிக்கரை யொன்றில்லையாம்.

இக்கட லதனக்தே-அங்கங்
கிடையிடைத் தான்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்-திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடம்
மிக்கதொர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி,கண்டீர்
மெய்ககலை முனிவர்களே!-இதன்
மெய்ப்பொருள் பரசிவன்சக்தி,கண்டீர்!

எல்லை யுண்டோ இலையோ?-இங்கு
யாவர் கண்டார்திசை வெளியினக்கே?
சொல்லுமொர் வரம்பிட்டால்-அதை

* * * *
(இது முற்றுப் பெறவில்லை)