மஹா காளியின் புகழ்

                                காவடிச் சிந்து
   

ராகம்-ஆனந்த பைரவி                                                                  தாளம்-ஆதி

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு-ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு-தழல்

தாலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு-மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.

மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ

வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்த மென்தனேழை யுள்ளம்

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை-அவள்

ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்தன்
அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.

இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலா மவள்புரியம் மாயை-அவள்
ஏதுமற்ற மெய்ப பொருளின் சாயை-எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த
எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை.

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும்-ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும்-அவை

யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.

நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த
நெறியுமெய்து வர்நினைத்தபோது-அந்த

நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது-என்றும்
நேர்மைவேதம் சொல்லும்வழி யீது.