மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர்

                                         மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர்

   இந்த நூற்றாண்டின் பிரமிக்க வைக்கும் சினிமா என்று விமர்சகர்களால் போற்றப்படும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்துக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
12 ஆண்டுகள் உழைத்து, 237 மில்லியன் டாலர் முதலீட்டில் பெரும் கனவுலகத்தையே இந்தப் படத்தில் கண்முன் சிருஷ்டித்திருந்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என்றும், இந்த நூற்றாண்டின் பிரமிப்பு இந்தப் படம் என்றும் டைம் உள்ளிட்ட பத்திரிகைகள் விமர்சனம் எழுதியுள்ளன (படத்தில் சில குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது).
கடந்த டிசம்பர் 18-ம் தேதி ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, உருகுவே, பராகுவே உள்ளிட்ட 6 நாடுகள் தவிர்த்து உலகம் முழுக்க இந்தப் படம் வெளியானது.
அமெரிக்காவில் 17-ம் தேதி நள்ளிரவு நடந்த பிரிமியர் காட்சி மூலம் மட்டுமே 3.5 மில்லியன் டாலர் வசூலித்தது அவதார். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை மட்டும் வட அமெரிக்கா-கனடாவில் 27 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்தது.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து மொத்தம் 73 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் மட்டுமே வசூலாகிவிட்டது. வட அமெரிக்கா கண்டம் முழுவதும் கடும் பனி – குளிர் நிலவுவதால் வசூல் சற்று பாதிக்கப்பட்டதாகவும் இல்லாவிட்டால் மேலும் 5 முதல் 10 சதவிகிதம் கூடுதல் வசூல் பதிவாகியிருக்கும் என்றும் ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது.
உலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து, முதல்வார இறுதியில், மூன்றே நாளில் அவதார் 232 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது (ஆதாரம்: வால் ஸ்ட்ரீட் ஜர்னல்).
முதல் மாத முடிவில் இந்தத் தொகை 2058 மில்லியன் டாலராக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ரிலீசாக நாடுகளில் கிடைக்கும் வருமானம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை ஜேம்ஸ் கேமரூனின் காவியப் படமான டைட்டானிக்குக்கு உண்டு. இப்போது அந்த சாதனையை முறியடிக்கிறது அவதார்.
இந்தியாவில் அவதாருக்கு கிடைத்துள்ள வரவேற்பு உள்ளூர் இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு அவதார் படத்துக்கு டிக்கெட் இல்லை. மற்ற பெரு நகரங்களிலும் இதுதான் நிலை.
இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த நகரங்களில் தரமான 3 டி திரையரங்குகள் மட்டும் இருந்திருந்தால், அவதார் வசூல் உள்ளூரில் எங்கேயோ போயிருக்கும் என்கிறார் இந்தப் படத்தை விநியோகித்துள்ள சத்யம் திரையரங்கின் ஸ்வரூப் ரெட்டி.