சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற அதிவேக ரயில்

      சிகரெட் புகையால் நடுவழியில் நின்ற அதிவேக ரயில்


   சீனாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகத்தின் அதிவேக ரயில், பயணி ஒருவர் புகைபிடித்ததால் தீப்பிடித்ததாக கருதப்பட்டு நடுவழியில் நின்று விட்டது.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டன. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் 4 மணி நேரத்தில் கடக்கின்றன.
இந்த ரயிலில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் கழிப்பறையில் கூட புகை பிடிக்க அனுமதியில்லை. இந்த விதியை மீறி பயணி ஒருவர் கடந்த வாரம் சிகரெட் பிடித்துள்ளார். சீனாவில் கடும் பனி வாட்டி வருகிறது. குளிரை தாங்க முடியாத ஒரு பயணி சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தார்.
புகை மூட்டத்தால் ரயிலில் இருந்த சென்சார் கருவி, தீப்பற்றியதாக நினைத்து எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதனால், இந்த ரயிலின் டிரைவர்கள் வண்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இதை தொடர்ந்து, அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2.30 மணி நேர சோதனைக்கு பிறகு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. ரயிலில் சிகரெட் பிடித்த பயணி நடுவழியில் இறங்கி ஓடிவிட்டார்.